சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை” என்று நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

டில்லி பாபு தயாரிப்பில், எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் – வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர் அப்போது பேசிய நடிகர் பரத், “சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை.

தயாரிப்பாளர் டில்லிப்பாபு அனைவரையும் மதிக்கக் கூடிய ஒரு நபர். இந்தக் கதை பற்றியும், இயக்குநர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துகொண்டார். இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஒருசேர ஒத்துப் போகக்கூடிய நபர் இயக்குநர். இந்தப் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே எஸ் ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்பும் தான் காரணம். பரத் தான் இந்த படம் உருவாக முதல் காரணம். அவர் மூலமாக தான் தயாரிப்பாளர் இந்த கதையை கேட்டு தயாரிக்க ஒப்புக்கொண்டார். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்தனர். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்பிகிறேன்” என்றார்.