காங்கிரஸ் செயற்குழு (Congress Working Committee) உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாம் என காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ப. சிதம்பரம், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்:

”காங்கிரஸ் கட்சியின் செயற்குழு என்பது காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்றக் கட்சித் தலைவர், மற்றும் 23 உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டது. இந்த 23 பேரில் 12 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மீதமுள்ள உறுப்பினர்களை தலைவர் நியமிக்க முடியும். காங்கிரஸ் கட்சியின் இந்த விதிப்படி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் பாதி பேரை தேர்தல் மூலம் கட்சி தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலும், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும் இவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்.

பாஜகவை வெற்றிகொள்ளும் வகையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தேசிய கட்சி. மற்ற கட்சிகள் எல்லாம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் செல்வாக்கு பெற்றவை என்ற உண்மையை எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து எங்களுக்கு கவலை இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அதன் மாநில பார்வையை கைவிட்டு தேசிய பார்வையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். சரத் பவார், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் இவ்வாறு செயல்பட்டு பிற கட்சிகளை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தியை வலிமையான, உறுதியான, விடா முயற்சி கொண்ட தலைவராக நிலைநிறுத்தி உள்ளது. நாடு சமூக, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது என்பது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே இது ஏற்படுத்தி இருக்கிறது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.