நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் மிதமான மழைக்கும் 20 ஆம் தேதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டக் குறிப்பில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 19-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.