அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது, வாஷிங்டன் நகரில் உள்ள பெரார் அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், ஐந்து முக ருத்ராட்சம் உள்ளிட்ட புராதன பொருட்கள் இருந்ததை பார்த்தேன்.

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3000-க்கும் மேற்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும் அங்குள்ள சிலைகளை மீட்கும் வகையில் இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் தனிக் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை குற்றவியல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து ஏற்கெனவே மனுதாரர்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான உத்தரவை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியை நியமனம் செய்தது.

அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், இந்த தகவல்களை மனுதாரர் மறைத்துள்ளார். மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, இந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.