சென்னை, கோவையில் டெண்டர் முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட காலத்தில் மேயராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளையும் சேர்க்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் கோரியதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சென்னை மற்றும் கோவையில் மேயர்களாக பதவி வகித்தவர்களையும், அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிடக்கோரி நேர்வழி இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் என்று தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கூடாது என உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.