உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இது எதிரொலியாக தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4827- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ. 38616-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 41544-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600 ஆக உள்ளது.