சென்னை: தமிழகத்தில் பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றும்  பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். அரசின் நலதிட்டங்கள், அரசின் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்ல சமூக ஊடக்கப்பிரிவு தொடங்கப்படும். இதனையடுத்து, சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் பணியாற்றும் ஆண்டுகளை பொறுத்து உயர்த்தப்பட்ட நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை பணியாற்றி இறந்தால் குடும்பத்துக்கு ரூ.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.