சிம்புவும், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டி மாநாடு வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் நடிகர் சிம்பு.

சிம்பு படங்கள் என்றால் சைலன்டாக வந்து அதே அமைதியுடன் பெட்டிக்குள் திரும்பும். இந்த வருட ஆரம்பத்தில் ஈஸ்வரன் என்ற படம் சிம்பு நடிப்பில் வெளியானது. சுசீந்திரன் இயக்கம். பாரதிராஜா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆனால், படம் என்னானது?

வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஆனால், மாநாடு படம் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் இயக்குனர் வெங்கட்பிரபு. பட வெளியீடு தள்ளிப் போனது, சிம்புவின் பெற்றோர், படம் தீபாவளிக்கு வெளிவரவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசியது என மாநாடு எப்போதும் லைம் லைட்டில் இருந்தது. படத்தின் ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா பேசிய வந்தான் சுட்டான் போனான்.. ரிப்பீட்டு டயலாக் இன்ஸ்டன்ட் ஹிட்டாகி அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இவையெல்லாம் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். படமும், அதன் திரைக்கதையும், காட்சிகளின் விறுவிறுப்பும் சபாஷ் போட வைக்க, திரையிட்ட இடங்கள் அனைத்திலும் காட்சிகளின், திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தனர். பாராட்டுகள் குவிகிறது. ரஜினியே தொலைபேசியில் அழைத்து ஃபென்டாஸ்டிக்.. ஃபென்டாஸ்டிக்… என்று பாராட்டியிருக்கிறார். பார்ட்டி வைத்து கொண்டாட இதைவிட காரணம் வேண்டுமா?

சிம்புவும், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டி மாநாடு வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.