ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று(டிச.3) தொடங்குகிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, இரவு 7.45 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்ட அபிநயமும், வியாக்யானமும் நடைபெற்று, இரவு 10 மணிக்கு திருவாராதனம், இரவு 10.30 பணிக்கு திருக்கொட்டாரத்தில்இருந்து சிறப்பலங்காரம், 11 மணிக்கு தீர்த்த கோஷ்டி ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து நாளை (டிச.4) பகல்பத்து (திருமொழி) திருநாள் தொடங்குகிறது. டிச.12 வரை தினந்தோறும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் டிச.13-ல் நடைபெறும்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.14-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் ராப்பத்து (திருவாய்மொழி) திருநாள் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக டிச.20-ம் தேதி திருக்கைத்தல சேவை, 21-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 23-ம் தேதி தீர்த்தவாரி, டிச.24-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமுறை ஆகியவை நடைபெறவுள்ளன.

இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.