நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்து இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன.இதையொட்டிய அவரது பகிர்வில், ”இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெரினா’. தொலைகாட்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக நாயகனாக அறிமுகமானது இந்தப் படத்தில்தான். அதன்பிறகு தொடர் வெற்றிகளால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இன்றோடு ‘மெரினா’ படம் வெளியாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்…

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம்.

இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.

இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக,

என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனால, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி – தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!

என் இதயத்தி ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்.

உங்கள் சிவகார்த்திகேயன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.