டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கின. இந்நிலையில், இன்று பாராலிம்பிக்ஸில் இந்தியாவிற்கான முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் பவினா படேல். பிரிட்டன் வீராங்கனையான சக்லடனுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற புள்ளிகளை எடுத்து போட்டியை வென்றார் பவினா படேல்.

முதல் கேமையே 11-7 என வென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் பவினா. இரண்டாவது கேமில் 9-11 என நெருங்கி வந்து தோற்றிருந்தார். மூன்றாவது கேம்தான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து 9-9, 10-10 என சமமாகவே சென்று கொண்டிருந்தனர். போட்டி 10 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது. நிறைய லான் ரேலிக்கள் ஆடப்பட்டது. இறுதியில் பயங்கர போராட்டத்திற்கு பிறகு 17-15 என இந்த கேமை வென்று 2-1 என லீட் எடுத்தார் பவினா.

நான்காவது கேமில் பிரிட்டன் வீராங்கனை வென்றே ஆக வேண்டிய சூழ்நிலை. அதனால் இந்த கேமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே சென்றது. இதிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து சுவாரஸ்யத்தை கூட்டினர். ஒரு கட்டத்தில் பவினா 8-10 என பின் தங்கியிருந்தார். பிரிட்டன் வீராங்கனை ஒரு புள்ளியை எடுத்தால் இந்த கேமை வென்றுவிடுவார் என்ற சூழலில் பவினா சிறப்பாக ஆடி தொடர்ந்து இரண்டு புள்ளிகளை பெற்று போட்டியை சமமாக்கினார். தொடர்ந்து நன்றாக ஆடியவர் இந்த கேமை 13-11 என வென்றார்.

இதன்மூலம் போட்டியையும் 3-1 என வென்றார். இந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா பெறும் முதல் வெற்றி இதுவே. பவினா நேற்று சீன வீராங்கனையான சூ யிங்குடன் மோதியிருந்தார். அதில், முதல் மூன்று கேம்களையுமே தொடர்ச்சியாக இழந்து தோற்றிருந்தார். இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து அவர் இன்று ஆடியிருக்கும் ஆட்டம் ரொம்பவே அசத்தலாக அமைந்திருந்தார். பல சமயங்களில் பிரிட்டன் வீராங்கனையை விட பின் தங்கியிருந்தார். ஆனால், அப்படியே விட்டுவிடாமல் முட்டி மோதி போராடி மீண்டு வந்து போட்டியை வென்றிருக்கிறார். இது அவரின் போர்க்குணத்திற்கு கிடைத்த வெற்றி!