சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை இன்று (ஜூன் 24) வெளியிட்டார்.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா, மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், LSD ஸ்டாம்புகள், Hash எனப்படும் கஞ்சா ஆயில் போன்ற நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் டைடல், நைட்ரவிட் உள்ளிட்ட உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக, சென்னை பெருநகர காவல்துறை மூலம் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், தீவிரமாக கண்காணித்தும் மேற்கண்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற ஜுன் 26-ம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை (International Day Against Drug abuse and Illicit Trafficking) முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் சார்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் (Banners), சுவரொட்டிகள் (Posters) மற்றும் துண்டு பிரசுரங்களை (Awareness Pamphlets) வெளியிட்டார்.

மேற்படி விழிப்புணர்வு சுவரொட்டிகள், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் T.S.அன்பு, (வடக்கு), J.லோகநாதன், (தலைமையிடம்), காவல் இணை ஆணையர் (வடக்கு மண்டலம்) R.V.ரம்யாபாரதி, மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.