ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி, அனைத்து வங்கிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. 2022-23 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், நிதிக் கொள்கைக் குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இப்போதைக்கு கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், யுபிஐ மூலம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலும் அறிமுகம் செய்யப்படும். ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி வேலைகள் இதன் மூலம் தடுக்கப்படும். அதோடு பரிவர்த்தனையும் எளிமையாகும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. ரெப்போ விகிதம் 4% மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% சதவீதமாகவும் உள்ளது.