மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் பள்ளி ஆகம ஆசிரியர்களின் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், சிவாச்சாரியர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2015ஆம் ஆண்டு மீண்டும் அர்ச்சகர் பள்ளியை திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. எனவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திற்குள்ளேயே அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியர்களை நியமிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என 18 நிபந்தனைகளோடு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் கோயில் துணை ஆணையரின் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.