இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 59-வது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா, ரஞ்சி கோப்பையில் வெற்றி பெற்ற மத்தியபிரதேச அணிகள் மோதின.

முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 484, மத்தியபிரதேச அணி 294 ரன்கள் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 246 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ம.பி. அணி 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நடைபெற்ற 5-ம் நாள் போட்டியின்போது ம.பி. அணி 2-வது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 30-வது முறையாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம், 2-ம் இன்னிங்ஸில் சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.