மதுரை எய்ம்ஸ் உருவாக ஜப்பான் நிதி தொடர்ச்சியாக வரவேண்டும். இது புரியாமல் ஒற்றைச் செங்கலை வைத்து அரசியல் செய்தவர்கள் ஏன் இன்னும் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம மதுரை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், வருகிற 12-ஆம் தேதி பிரதமரின் மோடியின் தமிழக வருகையை போது தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர், “பிரதமர் 12 ஆம் தேதி அரசு விழாவிற்கு வருகை தரும்போது பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக மட்டுமே தற்போது முடிவாகியுள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதாக இருந்தால் அதை முன் கூட்டியே சொல்லிவிட்டு தான் அறிவிப்பார்கள். தற்போது, பிரதமர் மருத்துவக்கல்லூரி திறந்து வைப்பதற்காக தான் வருகிறார்” என்று கூறினார்.

தொடர்ச்சியாக அவரிடம் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன:

தற்போது பிரதமர் அரசு விழாவுக்காக வருவதால் GoBackModi காட்ட முடியாது என்ற திமுகவின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகின்ற போது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க வரும்போது GoBackModi எனக் கூறினர். ஆனால், அந்தத் திட்டத்தின் மூலமாக ரூ.2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்தத் திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இவையெல்லாம் திமுகவினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம்.

தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளாரே?

எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களைபுள்ளிவிபரம் கொடுக்கச் சொல்லுங்கள். உண்மையில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளன. இது மாற்றாந்தாயின் மனப்பான்மையா? மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது.

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜப்பான் பிரதமரைத் தான் நம்ப வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறாரே?

இதையெல்லாம் நாங்கள் முன்பு சொன்னபோது அவர்கள் காதில் விழவில்லையா. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமானப் பணியை துவக்கி விட்டார்களா? ஏன் தாமதமாகிறது? 7 மாத காலமாகியும் ஒற்றைச் செங்கலை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் அரசியலுக்காக ஒற்றைச் செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா என வானதி சீனிவாசன் கூறினார்.