பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்து விட்டதாக ஜெயம் ரவி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி, ”பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன்.  மணிரத்தினம் சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுவேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கார்த்தி, “இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் – வந்தியத்தேவன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.