உதகை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகைஅருகே உள்ள கிளிஞ்சாடாதனியார் எஸ்டேட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய் ஓரவ் (30) என்ற தொழிலாளி கூலி வேலை செய்து வந்தார். இவர், 13 வயது சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விஜய் ஓரவ் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை உதகைநீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா நேற்று அளித்த தீர்ப்பில், விஜய் ஓரவுக்கு பிரிவு 450-ன் கீழ் 10 ஆண்டுகள், 366 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள், 7,8 போக்ஸோ பிரிவில் 5 ஆண்டுகள், 3,4 போக்ஸோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.