“திரையுலகில் சண்டைக் காட்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்து யாருமே சாதித்திராத சாதனைகள் பல புரிந்தவர்” என மறைந்த திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,“கன்னடப்படத்திலிருந்து தான் எனக்கு ஜூடோ ரத்னம் பழக்கமானார். படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் அவருடன் சண்டையிடும் பைஃட்மேன்களின் பாதுகாப்புக்குத்தான் அவர் முதலில் முக்கியத்துவம் கொடுப்பார். மிகவும் மென்மையான மனிதர். முரட்டுக்காளை படத்தின் ரயில் சண்டைக்காட்சி இப்போது வரை யாராலும் மறக்க முடியாது” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜூடோ கே.கே.ரத்னம் தன் இளம் வயதிலிருந்தே சிலம்பு , கத்தி மற்றும் வாள் சண்டை போன்ற கலையில் ஆர்வம் கொண்டு சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்று தமிழ் மட்டுமின்றி, இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என இந்திய திரையுலகில் சுமார் 1,500 திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர், மூன்று தலைமுறைகளை கண்டவர்.

திரையுலகில் சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்து யாருமே சாதித்திராத சாதனைகள் பல புரிந்தவர். இதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். திரைத்துறையில் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் . அவருடைய மறைவு திரைப்படத்துறையில் ஒரு ஈடுக்கட்ட முடியாத மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூடோ ரத்னம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்தவர் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்னம் (93). 1980-ம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, பாயும்புலி, நெற்றிக்கண், நல்லவன் என பல்வேறு வெற்றிபடங்களில் இவரது சண்டை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டுள்ளன.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கிராப்தர் படத்துக்கு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1959-ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநராக அறிமுகமானார். சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் ஜூடோ ரத்னம் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். அவருக்கு 3 மகன்கள், 5 மகள்கள். ஜூடோ ராமு என்ற மகன் திரைப்பட சண்டை பயிற்சியாளராகவும், பகத்சிங் என்பவர் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர்.