நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (டிச 01) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 22ஆம் தேதி ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். எனினும் வரும் டிச்.3 ஆம் தேதி வரை தனிமையில் இருப்பார். டிச.4ஆம் தேதி முதல் தனது அன்றாட வேலைகளை கமல்ஹாசன் தொடங்குவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.