கரூரில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவஹர் பஜாரில் உள்ள கடைக்கு ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள எஸ் மார்க் ஸ்டோர்ஸில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆய்வின்போது, மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததற்காக கடையினருக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 125 கிலோ எடைகொண்ட 2 மூட்டை குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆட்சியர் முன்னிலையில் கடைக்கு சீல்வைக்கப்பட்டது. ஏடிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர் உடனிந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறும்போது, “பள்ளி மாணவ, மாணவிகள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாணவர்களுக்கு அவற்றை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரில் ஜவஹர் பஜார், வெங்கமேடு, வெண்ணெய்மலை, மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், புன்னம், குளித்தலை, பஞ்சப்பட்டி, லாலாபேட்டை உள்ளிட்ட 9 இடங்களில் இன்று வருவாய், காவல், உணவு பாதுகாப்புத் துறையினர் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் ஜவஹர் பஜாரில் செயல்பட்டு வந்த மொத்த விற்பனையாளர் கடையில் இருந்து குட்கா, புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படுகிறது” என ஆட்சியர் கூறினார். மேலும், கரூர் வெண்ணெய்மலையில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸ் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.