பீஸ்ட் படத்தில் பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறி அப்படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளது குவைத் அரசு.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது. படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் அந்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுள்ளது.

ஏற்கெனவே மலையாளத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘குரூப்’ படத்திற்கும், தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது.