Site icon Metro People

வகுப்பறையில் பிரதிபலிக்கும் இல்லம் தேடிக் கல்வி: மாணவர்கள் மகிழ்ந்து கற்க வழிவகுத்திருப்பது வரம்

வகுப்பறை என்றாலே, கரும்பலகையும் அடிகோலும்தான் ஞாபகத்துக்கு வரும். இந்த வழமையை புரட்டிப் போட்டிருக்கிறது இல்லம் தேடி கல்வி. ஆடல், பாடல், கதை, கவிதை, விளையாட்டு, புதிர், நாடகம், வாசிப்பு, சொற்பொழிவு, புதிய கண்டுபிடிப்புகள், குழு விளையாட்டுகள் என குதூகலமாக மாணவர்கள் கல்வி கற்க உதவியுள்ளது இத்திட்டம்.

அடிப்படை கணிதம், வாசிப்பு என மாணவர்களிடம் காணப்பட்ட கற்றல் இடைவேளை குறைபாட்டை இத்திட்டம் நிவர்த்தி செய்து வருகிறது. இல்லம் தேடிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்லுவது முதல் செயல்பாடுகள் வரை அனைத்திலும் உற்சாகமாக உள்ளனர். ஆசிரியரிடம் கேட்க தயங்கிய கேள்விகளைக்கூட நம் அக்காவிடம் (தன்னார்வலர்) கேட்கலாம் என தைரியமாக கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இத்திட்டம் மூலமாக மிகவும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைக்குக்கூட ஆசிரியர்கள் மற்றும்தன்னார்வலர்கள் உதவியுடன் கற்றல் திறமையை வளர்க்க முடிகிறது. தன்னார்வலர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டு தலுடன் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது தனித்திறமையை வளர்க்கவும் இயலும்.

இத்திட்டத்தில் கொடுக்கப்படும் வரைபடங்கள் மாணவர்களுக்கு கண்ணைக் கவரும் விதத்திலும் எளிதில் கருத்தை புரிந்து கற்கக்கூடிய வகையிலும் உள்ளன. தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மாணவர்களை சிறப்பாக உருவாக்க அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

Exit mobile version