வால்பாறை வனச்சரகம் வரட்டுப் பாறை எஸ்டேட் பகுதியில், வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை உஸ்மான் என்பவர் பயன்படுத்தி வருகிறார். அங்குள்ள தேநீர் கடைக்கு பின்புறம் கோழிகள் அடைக்கப்படும் கூண்டில் நேற்று காலை ஆண் சிறுத்தை ஒன்று சிக்கி உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, “சிறுத்தையில் உடலில் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை. சிறுத்தையின் நகங்கள், பற்கள் ஆகியவை அப்படியே இருந்தன.

கூண்டிலிருந்த கோழியை பிடிக்க சிறுத்தை முயன்றபோது கூண்டில் இடதுகால் நகங்கள் சிக்கியுள்ளன. அதிலிருந்து விடுபட போராடியதில் உயிரிழந்திருக்க லாம். சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின்பே இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.