மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக சரவணன் நியமிக்கப்பட்டார்.

தற்போது மதுரை மாநகர் பாஜகவுக்குப் புதிய நிர்வாகிகளாக தனக்கு ஆதரவான கட்சியினரை சரவணன் நியமனம் செய்து வருகிறார்.

ஜன. 2-ல் தொடங்கி ஜன.22 வரை கட்சிக்கும், கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் 160-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளார்.

இதில் ஏற்கெனவே நிர் வாகிகளாக இருப்பவர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு இல்லை. இதனால் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருப்பவர்கள், தாங்கள் பதவியில் இருக் கிறோமா, இல்லையா என்கிற குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பழைய நிர்வாகி கள் கூறியதாவது:

மதுரை மாநகர் மாவட்ட பாஜகவில் 8 துணைத் தலை வர்கள், 8 செயலர்கள், 3 பொதுச்செயலர்கள், ஒரு பொருளாளர் இருக்கலாம். தற்போது நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் 6 பொதுச்செயலர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள் 12 பேர், செயலர்களாக 15 பேர் உள்ளனர். இது கட்சி அமைப்பு விதிகளுக்கு எதிரானது.

கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட மையக் குழுவின் ஒப் புதல் இல்லாமல் மாவட்டத் தலைவர் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நிர்வாகிகள் நியமனத்தில் மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகள், 18 மண்டல்களை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங் கப்படவில்லை. இதனால் மதுரை பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர் என்றனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கூறியதாவது:

பாஜகவில் புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்படும்போது, அவரது செயல்பாட்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவது வழக்கம். மாவட்ட நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதன் அடிப்படையில்தான் கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஒப்புதல் பெற்று மதுரை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாநகர் மாவட்டத்தில் பல நிர்வாகிகள் 2-வது முறையாகப் பதவியில் உள்ளனர். இதனால் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பழைய நிர்வாகிகள் பலர் மண்டல் பார்வையாளர்களாகவும், வேறு பொறுப்புகளிலும் உள்ளனர். அந்தப் பொறுப்புகளில் அவர்கள் தொடர்வார்கள்.