திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று(30-ம் தேதி) நடைபெற்றது.
“நினைத்தாலே முக்தி தரும் தலம்” என போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. 17 நாட்களுக்கு விழா நடைபெறும். அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில், நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
7-ம் நாள் உற்சவத்தில், மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. ஓரே நாளில் 5 தேர்கள், மாட வீதியில் பவனி வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்ததும், அடுத்த திருத்தேர் புறப்பாடு இருக்கும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மகா தேரோட்டத்தை, வெகு விமரிசையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில், வரும் டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, அன்று காலை 4 மணியளவில், மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளவதற்கான பந்தக்கால் முகூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (30-ம் தேதி) நடைபெற்றது.
கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்க, ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. பின்னர் கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பந்தக்காலை வணங்கி பக்தர்கள் வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தினர்.