தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,062 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். எனவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் சென்னையில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடம் இருந்து 60,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.