சென்னை ராயபுரத்தில் கடந்த 3-ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் இந்த தூய்மைப்பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் தீவிர தூய்மைப்பணியை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு வார்டுகளிலும் தூய்மை பணி தீவிரமாக நடைபெறும் எனவும், மக்கள் அதிகமாகக் கூடக் கூடிய ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பணி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், கொரட்டூர் ஏரியில் பொதுமக்கள் கோரிக்கையின்படி தெருவிளக்குகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை மாநகர் முழுவதும் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை உரியக் காலத்திற்குள் முடிக்க அனைத்து பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.