வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல் அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியதாவது: “நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்த பின்னர் இங்கு பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. மோடி தலைமையிலான அரசு மக்களை மகிழ்விக்கும் திட்டங்களை உருவாக்குதில்லை மாறாக அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குகிறது.

நாங்கள் ஜிஎஸ்டி கொண்டுவந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாங்கள் டிபிடி (Direct Benefit Transfer) கொண்டு வந்த போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கண்டிப்பாக இடைத்தரகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இது போல தான் அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு கடினமானதாக இருந்தாலும் அவர்களின் நலன் சார்ந்தே அவைகள் இருக்கும்.

நீங்கள் ஒரு கொள்கையை புரிந்து கொள்வதற்கு அது உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்த ஒரு கொள்கையையும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு உருவாக்குவதில்லை. மாறாக பிரச்சினைக்கான முழுமையான தீர்வின் அடிப்படையில் உருவாக்குகிறோம்.

மோடி அரசு, பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் உருவாக்கப்படவில்லை. மோடி அரசானது கொள்கைகளின் அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

பொதுவசதி என்பதை நாம் கருத்தில் கொண்டால்,எங்களின் அரசு முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. அதிகாரிகள் பல்வேறு மட்டங்களில் இருந்து வரும் அறிவுரைகளை அவர்கள் பார்வையில் ஏற்றுக்கொண்டும், அதே நேரத்தில் முழுமையான கோணத்தில் அதனை ஆராய்ந்து, அதன்பின்னர் அந்த பகுதிக்கு ஏற்ற வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஊடகங்கள் குறித்து அவர் பேசும் போது,”எந்த ஒரு அரசிடமிருந்து நல்ல விஷயங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த சித்தாந்தம் கொண்ட அரசாங்கமாக இருந்தாலும், அதன் சிறந்த முடிவுகளை ஒரு நல்ல பத்திரிகையாளர் திறந்த மனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் பத்திரிக்கையாளர் இல்லை சமூக செயல்பாட்டாளர். ஒரு சமூக செயல்பாட்டாளர் பத்திரிக்கையாளராகவோ, பத்திரிக்கையாளர் சமூக செயல்பாட்டாளராகவோ இருக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு பணிகள். அதனதன் நிலையில் இரண்டும் சிறந்த பணிகளே. ஒன்று இன்னென்றுடைய வேலையை செய்யும் போது பிரச்சினை உண்டாகிறது. இன்றைய நிலையில் இது மிகவும் அதிகரித்துள்ளது” என்றார்.