பணமதிப்பிழப்பு, 370 சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து உள்ளிட்டவை பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள். நாட்டின் அரசியல் கோணத்தையே பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பொதுவாழ்க்கை, மக்கள் பணிக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த 7-ம் தேதியோடு நிறைவடைந்துவிட்டது. இதையொட்டி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு நேர்காணல் அளித்தப் போது இவ்வாறு கூறியதோடு, பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல் சர்வாதிகாரி அல்ல என்றார்.

பிரதமர் மோடி சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கிறார், ஆட்சியை நடத்துகிறார் என்று பல்வேறு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக பணமதிப்பிழப்பு, நாடுமுழுதும் கடந்த ஆண்டு லாக்டவுன் கொண்டுவந்தது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 பிரிவு ரத்து, விவசாயிகள் போராட்டத்தை அடக்குவது, கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “பணமதிப்பிழப்பு, 370 சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து உள்ளிட்டவை பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள். நாட்டின் அரசியல் கோணத்தையே பிரதமர் மோடி மாற்றியுள்ளார். அதனால்தான் அவர் மீதான தனிநபர் தாக்குதல் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு இந்த அளவுக்கு நம்பிக்கை இருப்பதற்கு காரணம் மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட விருப்புகள் இல்லை, தேசத்துக்காக பணியாற்றுவதேஅவரின் விருப்பம். பிரதமர் மோடியை ஒவ்வொரு முறை எதிர்க்கட்சி தாக்கும்போதும் ஒவ்வொருமுறையும் அவர் மேலும் வலிமையடைகிறார்.

பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடியவர் என்று சிலர் அவரின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். சில கடினமான முடிவுகளை மோடி எடுக்கக்கூடியவர், ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர். எதி்ர்க்கட்சியினர் கூறுவதுபோல் பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல. இந்த நாடு சந்தித்ததிலேயே சிறந்த ஜனநாயகத் தலைவர் மோடியாகத்தான் இருப்பார். எந்தவிதமான முக்கியமான முடிவுகளையும் ஒவ்வொருவரிடமும் ஆலோசனை செய்தபின்புதான் எடுப்பார்.

அரசு ரீதியான முடிவுகள், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது தனது விருப்பங்களை ஒருபோதும் நுழைத்தது இல்லை. நாம் வெறும் அரசை மட்டும் நிர்வகிக்க இங்கு வரவில்லை, தேசத்தை கட்டமைக்க வந்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார்.

பிரதமர் மோடியுடன் நான் பணியாற்றியுள்ளேன், பணியாற்றியவர்களிடம் கேளுங்கள், ஜனநாயக முறைப்படி அமைச்சரவையை இதற்கு முன் இருந்தயாராலும் நடத்தியிருக்க முடியாது. பிரதமர் மோடியைப் போல் நன்கு கவனிப்பவர் யாருமில்லை பார்த்ததும் இல்லை.

ஒவ்வொருவர் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்பார், தகுந்த ஆலோசனைகளைக் கூறினால் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளிப்பார். ஆனால் இறுதி முடிவு எடுக்கக்கூடியவர் அவர்தான் ஏனென்றால் பிரதமர் அவர்தானே” எனத் தெரிவித்தார்.