ராயக்கோட்டை திமுக பொதுக்கூட்ட வன்முறை வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை வரவேற்று கட்சியினர், ராயக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்டாசுகள் வெடித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து சிதறியது. இதில், ரஜினி ரசிகர் மன்ற கவுரவ தலைவர் தஸ்தகிரி (20) படுகாயங்களுடன் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து திமுக பொதுக்கூட்டத்தில் வன்முறை சம்பவம் அரங்ககேறியது. இதில் அரசு வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், நம்மாண்டஹள்ளியை சேர்ந்த மாதேசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திமுக முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், நகர செயலாளர் எஸ்.கே.நவாப், நாராயணமூர்த்தி உட்பட 10 பேர் மீது ராயக்கோட்டை போலீஸார், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிந்த 10 பேரில் முருகேசன் என்பவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.

இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சக்திவேல் இன்று (பிப்.9) தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திமுக முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப் உட்பட 9 பேர் விடுதலை என்று கூறப்பட்டு இருந்தது.

இவ்வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் தலைமையில் திமுகவினர், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.