இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் அடுத்த மாதம் 9-ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்” எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று (மே 7) காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துகொண்டனர். இதனிடையே, இருவரும் தங்களது திருமணத்தை திருப்பதியில் நடத்தப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அவர்களின் திருமண தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் திருப்பதியில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நாங்கள் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி கேட்டோம். நீங்கள் அதனைத் தந்துவிட்டீர்கள் என்று திருப்பதி ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக விக்னேஷ், நயன் ஜோடி ஷீரடி சாய்பாபா கோயிலுக்கும் சென்றிருந்தனர். அங்கே எடுக்கப்பட்ட படத்தையும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.