கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு தக்காளி மைதானத்தைத் திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டது. மார்க்கெட் கமிட்டி சார்பில் 800 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனோ பரவல் மற்றும் தக்காளி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தான் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கபட்டது.

தற்போது இயல்புநிலை திரும்பி வருவதால் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கென நிரந்தரமாக இடம் ஒதுக்கமுடியாது என உத்தரவிட்டார்.

மேலும், சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.