டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் ரவி குமார் தாஹியா, தீபக் பூனியா இருவரும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ரவி குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும், தீபக் பூனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரர் ஜார்ஜி வெலன்டினோவை எதிர்கொண்டார் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா. இந்தப் போட்டியில் வெலன்டினோவை 4-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு ரவி குமார் தகுதி பெற்றார்.

மல்யுத்தத்தில் கிடுக்கிப்பிடிகளைப் போடுவதிலும், எதிராளிப் பிடிகள் மூலம் லாக் செய்தால், அதிலிருந்து விடுபடுவது குறித்த தொழில்நுட்ப ரீதியாக நன்கு அறிந்தவர் ரவி குமார் தாஹியா. இதனால்தான் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரரை எளிமையாக வீழ்த்த முடிந்தது.

ஆட்டம் முடிய ஒருநிமிடம் 10 வினாடிகள் இருந்தபோதே ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவர் அறிவித்தார். ரவி குமார் தாஹியா அதிகமான புள்ளிகள் முன்னிலையில் இருப்பதால், பல்கேரிய வீரர் பதிலடி கொடுக்க வாய்ப்பில்லை எனக் கூறி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நுர்இஸ்லாம் சனாயேவுடன் மோதல் நிகழ்த்துகிறார் ரவி குமார் தாஹியா.

86 கிலோ எடைப் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் சீன வீரர் ஜூசென் லின்னுடன் களம் கண்டார் இந்திய வீரர் தீபக் பூனியா. முதல் பாதியில் இந்திய வீரர் தீபக் பூனியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீன வீரர் 3 புள்ளிகள் பெற்ற நிலையில், தீபக் பூனியா 5 புள்ளிகள் பெற்றார். இறுதியில் சீன வீரரை 3-6 என்ற கணக்கில் தீபக் பூனியா வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

அரையிறுதியில் 2018-ம் ஆண்டு உலக சாம்பியனும் அமெரிக்க வீரருமான டேவிட் மோரிஸ் டெய்லருடன் மோதுகிறார் தீபக் பூனியா.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் கெரிகேமி அகிமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தீபக் பூனியா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.