தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத் துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முழுமையான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 26.09.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7ம் தேதி ஆன்லைன் ரம்மி தடையைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டம் இன்று (அக்.19 ) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் சட்டத்தை தாக்கல் செய்தார். இதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.