அரசு மருத்துவமனைகளில் 60% பேர் மட்டுமே மகப்பேறு சிகிச்சை பெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான PICMW 2.0 இணையதளத்தில் மகப்பேறு விவரத்தை சுயமாக பதிவு செய்து எண் பெறும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் பேசுகையில், “அரசு மருத்துவமனைகளில் 60% பேர் மட்டுமே மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த 2 ஆண்டுகளில் 75% ஆக உயர வேண்டும் என்பதுதான் சுகாதாரத் துறை இலக்கு. இதனால் அரசு மருத்துவ சேவைகளையும், கட்டமைப்பையும் மேம்படுத்தவது அவசியம். 70.43 லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 கோடி பேர் என்ற எண்ணிக்கையை எட்ட வேண்டும். இதற்காக சேவையாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 1.22 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், 43லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். மாதம் ஒரு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதற்காக 1.3 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. ஜூன் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. தொற்று நோய் சவாலான ஒன்றாக உள்ளது, இதனை கட்டுப்படுத்த, தடுப்பூசி கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1000 மகப்பேறில் 15 சிசுக்கள் உயிரிழப்பு என்றிருந்த எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சிசு உயிரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடம் பெற்றுள்ளது. விரைவில், சிசு மரணம் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.