நீண்டகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் ரோசய்யா என்று அவரது மறைவு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (டிச.4) காலை அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி., அமைச்சர், முதல்வர், ஆளுநர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து நீண்டகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் ரோசய்யா. அன்னாரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.