சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சென்னையின் முக்கிய வணிக மையமான தியாகராய நகரில், மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன் தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

தற்போது, மாநகரப் பகுதிகளை இணைக்கும் வகையில் இங்கிருந்து தினமும் 480 பேருந்துகள் 2,000 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, மயிலாப்பூர், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பிராட்வே, வள்ளலார் நகர், கோவளம், போரூர், பூந்தமல்லி போன்ற முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினமும் சுமார் 55 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு கழிப்பிடம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பல்வேறு பணியின் காரணமாகவும், ஆடை, வீட்டுஉபயோகப் பொருட்கள், நகைகள் வாங்குவதற்காகவும் தியாகராய நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து, செல்கின்றனர்.

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில்தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால், தற்போது தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு பயணிகளுக்கான கழிப்பிட வசதி இல்லை. மேலும், ஓய்வெடுக்க இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். தியாகராய நகர் போன்ற பெரிய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் புதிய கொள்கைபடி, பெரிய பேருந்து நிலையங்களைத் தேர்வு செய்து, அவற்றை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில், சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையமும் ஒன்று. மேலும், வணிக வளாகத்துடன், நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றனர்.