பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு ரயிலில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் சிறப்பு பேருந்துகளுக்கு நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, முன்பதிவு செய்துகொள்ளலாம். பேருந்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள மற்றும் புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்ன பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.