மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி கூடுதல் சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும்; கூடுதல் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.

கேரளத்தில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 3ஆக குறைக்கப்பட்டு விட்டது. 2008ம் ஆண்டு விதிகளின்படி தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 48-லிருந்து 16ஆக குறைக்கப்பட வேண்டும். இதை 24.09.21 வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 16ஆக குறைக்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடும் ஆகும். அந்த எண்ணிக்கையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடிகளை குறைக்கக் கோருவதன் நோக்கம் சுங்கக்கட்டண சுமை குறைய வேண்டும் என்பது தான். சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படும் போது, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டால், அதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.
சுங்கக்கட்டண கொள்ளை தொடரும்.

மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அது தான் சுங்கச்சாவடி சீர்திருத்தத்தின் பயன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும்!” என்று அன்புமணி கூறியுள்ளார்.