மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த, மீனாட்சி ஆளும் மதுரையில் குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் உலக முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள். உலகை ஆளும் சக்தி கொண்டவர்கள் தான் தமிழர்கள். கூகுள் சுந்தர்பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

தமிழ்மொழியின் பெருமை

தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி. ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர் பிரதமர் மோடி. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்துள்ளவர் மோடி. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோளைகாட்டி தமிழ்மொழியின் பெருமையை பரப்பி வருகிறார்.

 

தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக உலகளவில் செல்லக் கூடியவர்களாக மாறுவார்கள். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களா இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். கொரோனா சவாலை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது. இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

உக்ரைன் போரின் போது ஆப்ரேசன் கங்கா மூலமாக 23 ஆயிரம் மாணவர்களை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர். நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் மூலம் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் யோகா

யோகா உலக நாடு முழுவதிலும் போற்றப்படுகிறது. 75வது சுதந்திர ஆண்டில் யோகா கலையை உலகம் முழுவதும் எடுத்து சென்றுள்ளோம். நாம் இந்தியனாக, தமிழனாக உலகையே ஆண்டு கொண்டுள்ளோம். 100வது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.

உலக முழுவதும் விளையாட்டு போட்டிகளில் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைப்பது பிரதமரின் கனவு. தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விகொள்கை முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துகளை படிக்க முடியும். உலகெங்கும் முன்னேற்றும் கல்விகொள்கையாக இருக்கும். தாய் மொழி கல்வியை ஊக்குவிக்க தான் புதிய கல்விக்கொள்கை திட்டம்.