தஞ்சாவூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸாரை தள்ளிவிட்டு விட்டு தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரையை சேர்தவர் தர்மராஜ் (27),. இவர் மீது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் கொள்ளை வழக்குகள் உள்ளன. தற்போது புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சை மருத்துவக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக இவர் மீது ஐந்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக நேற்று மாலை தர்மராஜை, புதுக்கோட்டையில் இருந்து போலீஸார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று இரவு 7:15 மணியளவில் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்புக்கு வந்த இரண்டு போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இதில் சுதாரித்து எழுந்து ஒரு போலீஸ்காரர் தர்மராஜை துரத்திச் சென்றார். இருப்பினும் தர்மராஜைப் பிடிக்க முடியவில்லை. வாகன போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் அதைப் பயன்படுத்தி தர்மராஜ் தப்பியோடியதாக போலீஸார் கூறுகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்ட எல்லைகளில தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை –திருச்சி, பட்டுக்கோட்டை, திருவாரூர் செல்லும் சாலை என பல பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.