வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், நடிகர் விஜய் அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வந்தார்.

விஜயை பார்க்க வாக்குச் சாவடியில் மக்கள் கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்களிப்பதற்காக வந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த விஜய் வெளியே வந்து தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்தது பெரும் விவாதப் பொருளானது குறிப்பிடத்தக்கது.