சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற, அதிகாரிகளுக்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து ஐந்து நாட்கள் மழை பெய்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை நேரில் சென்று ஆய்வு செய்து வரும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (13.11.2021) காலை 8 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

அப்போது, (பஜார் சாலை, அண்ணா சாலை சந்திப்பு) சைதாப்பேட்டை, 100 அடி சாலை (ஈக்காட்டுத்தாங்கல்), பாரதிதாசன் காலனி போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியைப் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, தேங்கியுள்ள நீரை விரைவில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இனிவரும் காலங்களில் இதுபோன்று மழை நீர் தேங்குவதைத் தடுக்கும் பொருட்டு மழைநீர் வடிகால்கள் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர்கள் கூறினார்கள்.”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.