பாம்பன் பாலத்தில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பது அன்னை இந்திரா காந்தி பாம்பன் சாலை பாலம் ஆகும். இரண்டரை கிலோ மீட்டர் நீளம் உள்ள இப்பாலத்தில் இருந்து மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல்கள், பாம்பன் ரயில் பாலம், பவளப் பாறைகள், குருசடை தீவு, மணலி தீவு, மணலிபட்டி தீவு, பாம்பன் கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

இதனால் பாம்பன் சாலைப் பாலத்தின் இருபுறங்களிலும் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி மொபைல் போனில் புகைப்படங்களை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். தொடர்ந்து விபத்தும் ஏற்படுகிறது. பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம், பாலத்தில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. ஆனால் ராமேசுவரம் தீவுப் பகுதிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், தனியார் பேருந்துகள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அசுர வேகத்தில் வருவதால் விபத்துகள் நேர்ந்து உயிரிழப்புகளும் அடிக்கடி அதிகரித்து வருகின்றன.

இதனால் காவல் துறையினர் பாம்பன் சாலை பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேரமும் காவலர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பாம்பன் காவல் அதிகாரிகள் கூறுகையில், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் சாலைப் பாலம் தொடங்கும் இடங்களில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் இறங்கி பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை ரசிக்க வேண்டும். போக்குவரத்துக்கு தடையாக பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். வாகனங்களை வேகமாக ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமின்றி வழக்கும் பதிவு செய்யப்படும் என்றனர்.