அதிகரித்து வரும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. 2-வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது. இந்தநிலையில் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரையில் மொத்தமாக 1.4 சதவீத ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,பொதுவாக உலக பொருளாதாரம் பெரும் சிக்கலில் உள்ளது. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. பணவீக்கம் 7 சதவீகமாக அதிகரித்துள்ளது. ஆண்டின் இரண்டாவது பாதியில் 6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீம் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக கடந்த மாதம், ரிசர்வ் வங்கியின் நாணயக்கொள்கை குழு (எம்பிசி) ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்படும் என அறிவித்திருந்தது. முக்கியமாக கடந்த மே மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த கொள்கை விகிதத்தை 140 பிபிஎஸ் உயர்த்தி 5.4 சதவீதமாக உயர்த்தி இருந்தது.