பா.இரஞ்சித் தயாரித்து வரும் புதிய படத்தில் தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அதற்கு முன்பாக சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ‘அட்டக்கத்தி’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

‘அட்டக்கத்தி’ படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘குண்டு’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு தற்போது மீண்டும் பா.இரஞ்சித் – தினேஷ் கூட்டணி இணைந்துள்ளது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

விரைவில் தினேஷுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.