Site icon Metro People

ரோஹித் சர்மா ஒருநாள் அணி கேப்டன்: கோலியிடமிருந்து பதவி பறிப்பு: தெ.ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும், டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியும், ரஹானேயிடம்இருந்து துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ரோஹித் சர்மாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17ம் தேதி புறப்படும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20தொடரை பின்னர் நடத்துவது குறித்து இருநாட்டு வாரியங்களும் முடிவு செய்யும்.
டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், 2 விதமான வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு 2 விதமான கேப்டன் இருக்க முடியாது, என்பதால், கோலியிடம் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்பதவி மட்டும் வழங்கப்பட்டு, அவரிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளி்ல் நீண்டகாலமாகவே ஃபார்ம்இன்றி தவித்து வரும் ரஹானே அணியிலிருந்து நீக்கப்படலாம் அல்லது துணைக் கேப்டன் பதவிபறிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரஹானேயின் பேட்டிங் சராசரி 21 ரன்களைத் தாண்டவில்லை. ஆனாலும் தென் ஆப்பரிக்கத் தொடரில் இறுதியாக வாய்ப்பளிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு துணைக் கேப்டனாக ரோஹித்சர்மாவும், ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவையும் நியமித்துபிசிசிஐ நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ரஹானே மட்டுமல்ல, புஜாரா, விராட் கோலிகூட கடந்த சில தொடர்களாக ரன்கள் சேர்க்கவில்லை, பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இதில் ஒரு வீரரை மட்டும் நீக்குவது நியாயமல்ல என்பதால் 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கத் தொடர் ரஹானேவுக்கும், புஜாராவுக்கும் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. விராட் கோலி கேப்டன் தன்னை நிரூபித்துவிடுவார் என்று நம்புகிறோம். வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே தொடங்க வீரராக களமிறங்க வாய்ப்பில்லாத பட்சத்தில் எவ்வாறு அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும். ஷுப்மான் கில் தற்போது காயமடைந்துள்ளதால், அவரின் இடத்தை ரஹானே பிடிக்க நல்ல வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.

காயம் காரணமாக ரவிந்திர ஜடேஜா, ஷுப்மான் கில், அக்ஸர் படேல் ஆகியோர் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ஜெயந்த் யாதவ் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்பு வீரராக உ.பி.யைச் சேர்ந்த சவுரவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது இந்திய ஏ அணியில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறார்.

பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாத இஷாந்த் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பாக தென் ஆப்பிரிக்கத் தொடர் இருக்கும். இந்தத் தொடரில் இஷாந்த் சர்மா தன்னை நிரூபிக்காமல் காயம் காரணமாக விளையாடாமல் போனாலோ இந்தத் தொடரே கடைசியாக இருக்கும். இந்தியாவில் இலங்கைக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில்கூட இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகம். வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்) ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப்பந்த், விருதிமான் சஹா,ரவிச்சந்திர அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்

காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் ஷைனி, சவுரவ் குமார், தீபக் சஹர், அர்ஸன் நாக்வஸ்வாலா

Exit mobile version