திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆம்பூர் பகுதிகளில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டார். ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதி வழியாக அவர் சென்றபோது, எதிரே 2 மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

அந்த மாட்டு வண்டிகளை வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தடுத்து நிறுத்தினார். அரசு அதிகாரியை கண்டதும், மாட்டு வண்டிகளில் வந்த 3 பேர் வண்டிகளை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து, ஆம்பூர் நகர காவல் துறையினரை அங்கு வரவழைத்த வருவாய் கோட்டாட்சியர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் கடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.