சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தன்னை இதே வழக்கில் கைதானவர்கள் கொலை செய்யப் பார்க்கின்றனர் என நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்களை 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்தாக இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இருவரையும் அடித்து கொலை செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் காவலர் பால்துரை உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.

கைதான 9 பேரும் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது. கைதான நாளிலிருந்து 9 பேரும் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. இந்த வழக்கில் அடுத்த விசாரணை மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வழக்கில் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு சிறையிலிருந்தவாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘இந்த வழக்கில் என்னுடன் கைதானவர்களிடம் ஏன் சாகும் வரை தந்தை, மகனை தாக்கினீர்கள், தேவையில்லாமல் என்னையும் வழக்கில் சிக்க வைத்துவீட்டிர்களே எனக் கேட்டேன். இதனால் என் மீது கோபம் அடைந்தவர்கள் சிறை வளாகத்தில் என்னை தாக்க முயன்றனர். இதனால் தனி அறை, உயர் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தை தொடர்ந்து சிறையில் ஸ்ரீதருக்கு பாதுகாப்பு வழங்க சிறை நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.